தர்மசாலா: 17ஆவது ஐபிஎல் தொடரின் 53ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-அஜிங்கியா ரஹானே ஜோடியில் ரஹானே 9(7) ரன்கள் மட்டுமே எடுத்து அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின் களமிறங்கிய டேரில் மிட்செல் கெய்க்வாட்டுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
இந்நிலையில் அரைசதத்தை நெருங்கிக்கொண்டிருந்த கெய்க்வாட் 32(21) ரன்களுடன் ராகுல் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே ஷிவம் தூபே ரன்கள் ஏதுமின்றி தனது விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் 30(19) ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த மொயீன் அலி 17(20) ரன்களுடன் சாம் கரன் பந்துவீச்சிலும், மிட்செல் சாண்ட்னர் 11(11) ரன்களுடன் ராகுல் சஹார் பந்துவீச்சிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய ஷார்துல் தாக்கூர் அதிரடியாக விளையாடியதுடன் 17(11) ரன்களைச் சேர்த்து ஹர்ஷல் படேலிடம் விக்கெட்டை இழக்க, அடுத்துவந்ந மகேந்திர சிங் தோனியும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இறுதியில் 43(26) ரன்களைச் சேர்த்திருந்த ரவீந்திர ஜடேஜாவும் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான பிரப்ஷிம்ரன் சிங் -ஜானி பேர்ஸ்டோவ் ஜோடியில் பேர்ஸ்டோவ் 7(6) ரன்களிலும், அடுத்துவந்த ரைலீ ரூஸோவ்வும் ரன்கள் ஏதுமின்றி என அடுத்தடுத்து துஷார் தேஷ்பாண்டேவின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தனர்.
ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த பிரப்ஷிம்ரன் சிங் -ஷஷாங்க் சிங் ஜோடி அதிரடியாக விளையாடியதுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இருப்பினும் 27(20) ரன்கள் எடுத்திருந்த ஷஷாங்க் சிங் மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 30(23) ரன்கள் எடுத்திருந்த பிரப்ஷிம்ரன் சிங்கும் ஜடேஜா பந்துவீச்சில் வெளியேறினார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஜித்தேஷ் சர்மா ரன்கள் ஏதுமின்றி சிமர்ஜீத் சிங் பந்துவீச்சிலும், கேப்டன் சாம் கரன் 7(11), அஷுதோஷ் சர்மா 3(10) ஆகியோர் சொற்ப ரன்களுடன் ஜடேஜா பந்துவீச்சிலும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் அதிரடியாக விளையாட முற்பட்ட ஹர்ஷல் படேலும் 12(13) ரன்களுடன் சிமர்ஜீத் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததால், பஞ்சாப் கிங்ஸ் அணி 90 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது.
இந்நிலையில் ஜோடி சேர்ந்த ஹர்ப்ரீத் பிரார் -ராகுல் சஹார் ஆகியோர் அணியின் ரன் ரேட்டை உயர்த்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் 16(10) ரன்கள் எடுத்திருந்த ராகுல் சஹார் ஷர்தூல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததால், பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சிஎஸ்கே அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
Be the first to comment on "பஞ்சாப் கிங்ஸை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது."