சூர்யக்குமார் யாதவின் அதிரடியால் ஆர்சிபி அணியை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ் அணி.

www.indcricketnews.com-indian-cricket-news-1002133
Jasprit Bumrah of Mumbai Indians celebrating the wicket of Faf Du Plessis (c) of Royal Challengers Bangalore during match 25 of the Indian Premier League season 17 (IPL 2024) between Mumbai Indians and Royal Challengers Bangalore held at the Wankhede Stadium, Mumbai on the 11th April 2024. Photo by Saikat Das / Sportzpics for IPL

மும்பை: 17ஆவது ஐபிஎல் தொடரின் 25ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ்- விராட் கோலி ஜோடியில் நட்சத்திர வீரர் கோஹ்லி 3(9) ரன்கள் மட்டுமே எடுத்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்க, அடுத்தவந்த அறிமுக வீரர் வில் ஜேக்ஸ்  8(6) ரன்களின்போது ஆகாஷ் மத்வால் பந்துவீச்சில் வெளியேறினார்.

ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த டூ பிளெசிஸ்- ராஜத் பட்டிதார் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் ராஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடியதுடன் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த அடுத்த பந்திலேயே ஜெரால்டு கோட்ஸியிடம் ஆட்டமிழக்க, அடுத்துவந்த கிளென் மேக்ஸ்வெல் ரன்கள் ஏதுமின்றி ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ஆனால் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டுபிளெசிஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்ய, அவருக்கு துணையாக களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கும் அடுத்தடுத்து  பவுண்டரிகளை விளாசி மிராட்டினார். இந்நிலையில் 61(40) ரன்களைச் சேர்த்திருந்த டு பிளெசிஸ் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே மஹிபால் லாம்ரோரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.  

அதன்பின் களமிறங்கிய சௌரவ் சௌகான் மற்றும் வைஷாக் விஜயகுமார் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித் தள்ளிய தினேஷ் கார்த்திக் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைக் குவித்தது. இதில் தினேஷ் கார்த்திக் 53(23) ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.

இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான இஷான் கிஷான் -ரோஹித் சர்மா ஜோடியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷான் 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் மும்பை அணி முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்களைக் குவித்தது. ஆனால் அதன்பின் 69(34) ரன்கள் சேர்த்திருந்த இஷான் கிஷான் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்ந சூர்யகுமார் யாதவ் வானவேடிக்கை நிகழ்த்தினார்.

அதேசமயம் தனது பங்கிற்கு சில சிக்ஸர்களை பறக்கவிட்ட ரோஹித் சர்மாவும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது 38(24) ரன்களைச் சேர்த்து வில் ஜேக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இருப்பினும் சூர்யகுமார் யாதவ் 52(19) ரன்களுக்கு விஜயகுமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 21(6) ரன்களையும், திலக் வர்மா 16(10) ரன்களையும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மும்பை அணி 15.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி, நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது

Be the first to comment on "சூர்யக்குமார் யாதவின் அதிரடியால் ஆர்சிபி அணியை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ் அணி."

Leave a comment

Your email address will not be published.


*