2022 க்கு தள்ளிப்போகிறதா டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை!

ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு நடக்கயிருந்த டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை 2022க்கு ஒத்திவைக்க ஐசிசி திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

 உலகமே கொரோனா வைரஸ் அச்சத்தில் தவித்து வருகிறது. இதற்கிடையில் சர்வதேச அளவில் கொரோனா காரணமாக பொருளாதாரம் தாறுமாறாக தத்தளித்து வருகிறது. குறிப்பாக ஒலிம்பிக் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படவில்லை. இந்நிலையில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தாண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிகளை அடுத்தாண்டுக்கு ஒத்தி வைக்க ஐசிசி நிர்வாகக் குழு ஆலோசனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பையைத் திட்டமிட்டபடி நடத்தலாமா அல்லது அடுத்தாண்டு வரை ஒத்திவைக்கலாமா என்பது குறித்து ஐசிசி நிர்வாகக் குழு கூடி ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

ஆஸ்திரேலியா அனைத்து எல்லைகளையும் 6 மாதத்துக்கு மூடப்பட்டுள்ளது. இதனால், வரும் அக்டோபர் மாதம் திட்டமிட்டபடி டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்த எதிர்காலம் குறித்து ஐசிசி வரும் மே 28 ஆம் தேதி நடக்கவுள்ள கூட்டத்தில் முடிவு எடுக்கவுள்ளதாக தெரிகிறது.

சர்வதேச விளையாட்டு உலகை உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரையும் விட்டுவைக்காது என தெரிகிறாது. ஐசிசி கூட்டத்தில் டி-20 உலகக்கோப்பை தொடரை நடத்துவது, பந்தில் எச்சில் பயன்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

இதுகுறித்து ஐசிசி நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், “டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரையில் மூன்று யோசனைகள் உள்ளது. முதல் வழி: 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு ரசிகர்களை மைதானத்துக்குள் அனுமதிப்பது. இரண்டாவது வழி: காலி மைதானத்தில் போட்டிகளை நடத்துவது. மூன்றாவது வழி : வரும் 2022 ஆம் ஆண்டுக்கு தொடரை தள்ளிவைப்பது.” என்றார்.

ஆனால் டி-20 உலகக்கோப்பை தொடரை தள்ளிவைப்பது பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதால் இந்த முடிவு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு நிச்சயமாக பிடிக்காது. இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், “கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு தொடரை ஒத்திவைப்பது கண்டிப்பாக பிடிக்காது. ஆனால் ஐசிசி உறுப்பினர்கள் அடங்கியது. அதனால் அவர்கள் தான் எந்த இறுதி முடிவும் எடுக்க முடியும்” என்றார்.

இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடக்க உள்ள டி20 உலகக் கோப்பை 2022 க்கு மாற்றுவதற்கான ஆலோசனையை ஐசிசி வரும் மே 28 அன்று கூடும் போது அட்டவணையில் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Be the first to comment on "2022 க்கு தள்ளிப்போகிறதா டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை!"

Leave a comment

Your email address will not be published.


*