இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கௌதம் கம்பீரை  பிசிசிஐ நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-1001115

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). எதிர்வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருடன் தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் திராவிட் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது. முன்னதாக ரவி சாஸ்திரி தனது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியதும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.

ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இந்திய அணி தனது சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியைத் தழுவியது. மேலும் அத்தொடருடனே டிராவிட்டின் பயிற்சி காலமும் நிறைவடைந்த நிலையில், மேலும் ஓராண்டிற்கு அவரது பதிவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

இதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய தலைமை பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. மேலும் தலைமைப் பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் நெறிமுறைகளை குறித்தும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி சர்வதேச அரங்கில் பயிற்சியாளர்களாக கலக்கிய நியூசிலாந்தின் ஸ்டீஃபன் பிளெமிங், ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக இந்தியர்களையே பயிற்சியாளராக நியமித்து வரும் பிசிசிஐ அதே நடைமுறையே தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரிடம் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகிறது.

ஏனெனில் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரை இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ தற்போது ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கம்பீருக்கு சர்வதேச தொடர் அளவில் பயிற்சியாளர் அனுபவம் இல்லை என்றாலும், இதற்குமுன் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மற்றும் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் பணியாற்றிவரும் அவர், இந்த அணிகளை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றியுள்ளார். எனவே, ஐபிஎல் தொடர் முடிந்ததும் கம்பீருடன் பயிற்சியாளர் தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்குமுன், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் பெயர் அடிபட்டது. ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்கு விவிஎஸ் லட்சுமண் கடந்த வருடம்ஜ கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தார். இச்சூழலில் தான் கம்பீர் பெயர் தற்போது அடிபடத் தொடங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி அவர் விளையாடிய காலகட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்கம் மற்றும் மிடில் ஆர்டரில் வெற்றிகரமான வீரராக வலம்வந்த கௌதம் கம்பீர் இதுவரை 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 38 டி20 போட்டிகளில் விளையாடியதுடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார். அதுமட்டுமின்றி 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களை வென்ற இந்திய அணிகளிலும் முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கௌதம் கம்பீரை  பிசிசிஐ நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது."

Leave a comment

Your email address will not be published.


*