ஹைதராபாத்: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 69ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான பிரப்ஷிம்ரன் சிங்-அதர்வா டைடே ஜோடி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இருப்பினும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அதர்வா டைடே அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது 46(27) ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆனால் அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பிரப்ஷிம்ரன் சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, அவருடன் இணைந்த ரைலீ ரூஸோவும் அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இந்நிலையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரப்ஷிம்ரன் சிங் 71(45) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷஷாங்க் சிங் 2(4) ரன்கள் மட்டுமே எடுத்திருந்தபோது தேவையில்லாமல் ரன் அவுட்டாக, மறுபுறம் அரைசதத்தை நெருங்கிய ரைலீ ரூஸோவ் 49(24) ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆடட்மிழந்து வெளியேறினார்.
அதன்பின்னர் களமிறங்கிய அதிரடி வீரர் அஷுதோஷ் சர்மாவும் 2(3) ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்த ஜித்தேஷ் சர்மா 32(15) ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் நடராஜன் 2 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ், விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் -அபிஷேக் சர்மா ஜோடியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் முதல் பந்திலேயே அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த அபிஷேக் சர்மா -ராகுல் திரிபாதி ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் அபிஷேக் சர்மா 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அதன்பின் இருவரும் இணைந்து 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தபோது ராகுல் திரிபாதி 33(18) ரன்களுக்கு ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 66(28) ரன்கள் எடுத்திருந்த அபிஷேக் சர்மாவும் ஷஷாங்க் சிங் பந்துவீச்சில் வெளியேறினார். அதன்பின்னர் இணைந்த நிதீஷ் குமார் ரெட்டி-ஹென்ரிச் கிளாசென் ஜோடியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தவநத் நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிதீஷ் ரெட்டி 37(25) ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஹர்ஷல் படேலிடம் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷபாஸ் அஹ்மத் 3(6) ரன்களுடன் அர்ஷ்துப் சிங் பந்துவீச்சிலும், மறுமனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹென்ரிச் கிளாசென் 42(26) ரன்களுடன் ஹர்ப்ரீத் ப்ரார் பந்துவீச்சிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் இப்போட்டியில் ஹைதராபாத் அணி 19.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றியதுடன், புள்ளிப்பட்டியளின் இரண்டாம் இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "அபிஷேக் சர்மா மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரின் அதிரடியால் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது ஹைதராபாத் அணி."