ஹைதராபாத்: இந்தியாவில் நடைபெற்றுவரும் 17ஆவது ஐபிஎல் தொடரின் 57ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிஙகை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்களான கே.எல்ராகுல் -குயின்டன் டி காக் ஜோடியில் குயின்டன் டி காக் 2(5) ரன்களிலும், அடுத்துவந்த அதிரடி வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 3(5) ரன்களிலும் என புவனேஷ்வர் குமாரின் அடுத்தடுத்து ஓவர்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
ஆனால் அதன்பின் கே.எல்.ராகுலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த குர்னால் பாண்டியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இதில் நிதனமாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 29(33) ரன்கள் எடுத்திருந்தபோது பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 சிக்ஸர்களுடன் 24(21) ரன்களைச் சேர்த்திருந்த குர்னால் பாண்டியாவும் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இவர்களைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த நிக்கோலஸ் பூரன் -ஆயூஷ் பதோனி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன், 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் கடந்து வந்த நிலையில், அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய ஆயூஷ் பதோனி 28 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அவருக்கு உறுதுணையாக நிக்கோலஸ் பூரனும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த ஆயூஷ் பதோனி 9 பவுண்டரிகளுடன் 55(50) ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 48(26) ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடகக் வீரர்களான அபிஷேக் சர்மா- டிராவிஸ் ஹெட் ஜோடி முதல் ஓவரில் நிதானம் காட்டிய நிலையில், அதன்பின் எதிர்கொண்ட ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் விளாசித்தள்ளி அசத்தினார்.
இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதனால் ஹைதராபாத் அணி முதல் 6 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்து அசத்தியது. அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் சர்மாவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த ஹைதராபாத் அணியின் வெற்றியும் எளிதானது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த டிராவிஸ் ஹெட் 8 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் உட்பட 89(30) ரன்களையும், அபிஷேக் சர்மா 8 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் உடப்ட 75(28) ரன்களையும் சேர்த்து மிரட்டினர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து மிரட்டியது.
Be the first to comment on "டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோரின் அதிரடியால் லக்னோ அணியை வீழ்த்திய ஹைதராபாத் அணி அபார வெற்றிபெற்றது."