ராஜஸ்தான் ராயல்ஸை அபாரமான பந்துவீச்சின் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியை பதிவுசெய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

www.indcricketnews.com-indian-cricket-news-1001193
Rajasthan Royals players celebrates the wicket of Abhishek Sharma of Sunrisers Hyderabad during match 50 of the Indian Premier League season 17 (IPL 2024) between Sunrisers Hyderabad and Rajasthan Royals held at the Rajiv Gandhi International Stadium, Hyderabad on the 2nd May 2024. Photo by Vipin Pawar / Sportzpics for IPL

ஹைதராபாத்: 17ஆவது ஐபிஎல் தொடரின் 50ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட்-அபிஷேக் சர்மா ஜோடியில் அதிரடியாக விளையாட முற்பட்ட அபிஷேக் 12(10) ரன்கள் மட்டுமே எடுத்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த அன்மோல்ப்ரீத் சிங் 5(5) ரன்களுடன் சந்தீப் சர்மா பந்துவீச்சில் வெளியேறினார்.

ஆனால் அதன்பின் டிராவிஸ் ஹெட்டுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த நிதீஷ் ரெட்டி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் டிராவிஸ் ஹெட்டும் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

அதன்பின் 58(44) ரன்கள் எடுத்திருந்தபோது டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை ஆவேஷ் கான் கைப்பற்றி அசத்தினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரிச் கிளசெனும் அதிரடி காட்ட, மறுபுறம் தொடர்ந்து பவுண்டரியும், சிக்ஸர்களுமாக விளாசிய நிதீஷ் ரெட்டி 30 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

இறுதியில் நிதீஷ் ரெட்டி 76(42) ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 42(19) ரன்களையும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர். இதன்மூலம் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முயிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ஜோஸ் பட்லர் -யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடியில் பட்லர் ரன்கள் ஏதுமின்றி புவனேஷ்வர் குமார் வீசிய இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்து நடையைக்கட்ட, அடுத்துவந்த கேப்டன் சஞ்சு சாம்சன் இரண்டு பந்துகளை தடுத்து விளையாடிய நிலையில், புவனேஷ்வர் குமாரின் அபாரமான இன்ஸ்விங் பந்தில் க்ளீன் போல்டாகி ரன்கள் ஏதுமின்றி வெளியேறி ஏமாற்றமளித்தார்.

ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் -ரியான் பராக் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், ஜெய்ஸ்வால் 30 பந்துகளிலும், ரியான் பராக் 31 பந்துகளிலும் அரைசதம் விளாசியதுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.

இந்நிலையில் ஜெய்ஸ்வால் 67(40) ரன்களுடன் நடராஜன் பந்துவீச்சில் ஆடட்மிழக்க, மறுபுறம் ரியான் பராக்கும் 77(49) ரன்கள் எடுத்திருந்தபோது பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் 13(9) ரன்களுடன் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த துருவ் ஜூரெல் 1(3) ரன்னுடன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார்.

இதனால் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் பந்தில் சிங்கிள் எடுத்து ஸ்டிரைக்கை ரொட்டி செய்ய, மறுபுறம் ரோவ்மன் பாவேல், இரண்டாவது பந்தில் இரண்டு ரன்களையும், மூன்றாவது பந்தில் பவுண்டரியும், நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தில் 2 ரன்களையும் சேர்க்க, ராஜஸ்தான் அணி வெற்றிக்கு கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

இதில் புவனேஷ்வர் குமார் வீசிய கடைசி பந்தை எதிர்கொண்ட ரோவ்மன் பாவேல் 27(15) ரன்களுடன் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனால் இறுதிவரை போராடிய ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

Be the first to comment on "ராஜஸ்தான் ராயல்ஸை அபாரமான பந்துவீச்சின் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியை பதிவுசெய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி."

Leave a comment

Your email address will not be published.


*