சென்னை: 17ஆவது ஐபிஎல் தொடரின் 46ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்று பலப்பரீட்சை நடத்தியது. சேப்பாக்கத்திலுள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் -அஜிங்கியா ரஹானே ஜோடியில் 9(12) ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ரஹானே புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் அதன்பின்னர் கெய்க்வாட்டுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த டேரில் மிட்செல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட் 31 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மிட்செல் 28 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் 52(32) ரன்கள் எடுத்திருந்தபோது மிட்செல் ஜெய்தேவ் உனாத்கட் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுபுறம் அபாரமாக விளையாடி வந்த கெய்க்வாட் தனது அதிரடியைத் தொடர்ந்தார். இவரைத்தொடர்ந்து நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஷிவம் தூபே சிக்ஸர்களை பறக்கவிட அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. ஆனால் மறுபுறம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கெய்க்வாட் 98(54) ரன்கள் எடுத்திருந்தபோது நடராஜன் பந்துவச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த மகேந்திர சிங் தோனி வழக்கம்போல் பவுண்டரி விளாசி இன்னிங்ஸைத் தொடங்கினார்.
அதேசமயம் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த தூபே 39(20) ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட்- அபிஷேக் சர்மா ஜோடியில் டிராவிஸ் ஹெட் 13(7) ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே இம்பேக்ட் வீரர் அன்மோல்ப்ரீத் சிங்கும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினார்.
அதன்பின் அபிஷேக் சர்மாவும் 15(9) ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறியதால், ஹைதராபாத் அணி பவர்பிளே ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இவர்களைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த ஐடன் மார்க்ரம் -நிதீஷ் ரெட்டி ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினார். இதில் நிதீஷ் ரெட்டி 15(15) ரன்களுடன் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்க்ரம் 32(26) ரன்கள் எடுத்திருந்தபோது மதீஷா பதிரானாவின் அபாரமான யார்க்கர் பந்துவீச்சில் வெளியேறினார்.
அதன்பின்னர் அணியின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஹென்ரிச் கிளாசென் 20(21) ரன்களுக்கும், அப்துல் சமத் 19(18) ரன்களுக்கும் என அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற, சிஎஸ்கே அணியின் வெற்றியும் உறுதியானது. அதேசமயம் அதன்பின் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸும் 5(7) ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த வீரர்களும் சோபிக்க தவறியதால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
சிஎஸ்கே அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகளையும், மதீஷா பதிரனா, முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் ஷர்தூல் தாக்கூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் சிஎஸ்கே அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
Be the first to comment on "ருதுராஜ் கெய்க்வாட்டின் அபார ஆட்டத்தால் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய சிஎஸ்கே அணி."