சுழற்பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் டெல்லி அணியை வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது ஆர்சிபி அணி.

www.indcricketnews.com-indian-cricket-news-100782
Arundhati Reddy of Delhi Capitals celebrates the wicket of Smriti Mandhana (c) of Royal Challengers Bangalore during the final of the Women’s Premier League 2024 between Delhi Capitals and Royal Challengers Bangalore held at the Arun Jaitley Stadium, New Delhi on the 17th March 2024 Photo by Ron Gaunt / Sportzpics for WPL

டெல்லி: இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான ஷஃபாலி வர்மா -கேப்டன் மெக் லெனிங் ஜோடி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் முதல் ஆறு ஓவர்களிலேயே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்களைச் சேர்த்தது.

இருப்பினும் அரைசதத்தை நெருங்கிக்கொண்டிருந்த ஷஃபாலி வர்மா 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 44(27) ரன்கள் சேர்த்திருந்த போது சிக்சர் அடிக்க முற்பட்டு ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த  ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் அலிஸ் கேப்ஸி ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ரன்கள் ஏதுமின்றி க்ளீன் போல்டாகி நடையைக்கட்டினர்.

அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட கேப்டன் மெக் லெனிங் 23(23) ரன்களுக்கு தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 8(16) ரன்களில் மரிஸான் கேப்பும், 3(11) ரன்களில் ஜெஸ் ஜோனசெனும், 5(3) ரன்களில் மின்னு மணியும் தங்கள் விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.  இறுதியில் களமிறங்கிய வீராங்கனைகளான ராதா யாதவ் 12(9) ரன்களில் ரன் அவுட்டாகியும், அருந்ததி ரெட்டி 10(13) மற்றும் தனியா பாட்டியா 0(1) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆர்சிபி அணியின் சுழற்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆர்சிபி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சோஃபி மோலினக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஷ்ரெயங்கா பாட்டில் 4 விக்கெட்டுகளையும், ஆஷா சோபனா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் சோஃபி டிவைன் ஜோடி முதல் பந்திலிருந்தே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். இந்நிலையில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 32(27) ரன்கள் எடுத்திருந்த சோஃபி டிவைன் ஷிகா பாண்டே பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் ஸ்மிருதி மந்தனாவுடன் ஜோடி சேர்ந்த எல்லிஸ் பெர்ரியும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், அதிரடியாக விளையாட முற்பட்ட ஸ்மிருதி மந்தனா 31(29) ரன்களின் போது மின்னு மணி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின்னர் இணைந்த எல்லிஸ் பெர்ரி -ரிச்சா கோஷ் இருவரும் பொறுப்புடன் விளையாடி ஆர்சிபி அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த எல்லிஸ் பெர்ரி 4 பவுண்டரிகளுடன் 35(37) ரன்களையும், ரிச்சா கோஷ் இரண்டு பவுண்டரிகளுடன் 17(14) ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து டபிள்யூபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளது.

Be the first to comment on "சுழற்பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் டெல்லி அணியை வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது ஆர்சிபி அணி."

Leave a comment

Your email address will not be published.


*