மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் ஏற்கனவே நடந்துமுடிந்துள்ள 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 7ஆம் தேதியன்று தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்க உள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதில் ஏற்கெனவே இத்தொடரை இங்கிலாந்து அணி இழந்துள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியிலாவது வெற்றிபெற முயற்சி மேற்கொள்ளும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேசமயம் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்று இத்தொடரை இந்திய கைப்பற்றியுள்ளதால், இப்போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்று இந்திய அணியும் ஆர்வம் காட்டி வருகிறது.
இந்நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்காக விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய முன்னனி வீரரான கே.எல்.ராகுல், அதன்பிறகு காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு, மூன்று மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலும் ராகுல் இடம்பெறவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஏனெனில் அவர் தனது காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத நிலையில், தற்போது மருத்துவ சிகிச்சைக்காக அவர் லண்டன் சென்றுள்ளதாகவும், அதன் காரணமாக கே.எல்.ராகுல் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து விலகியுள்ளதாகவும், அவரது காயம் குறித்து பிசிசிஐ மருத்துவ குழு தீவிரமாக கண்காணித்து வருவதாவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேசமயம் பணிச்சுமை காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வளிக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா மீண்டும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இணைந்துள்ளார். அதுமட்டுமின்றி ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவதற்காக வாஷிங்டன் சுந்தர் இப்போட்டியிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் பிசிசிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் ஷர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஸஷ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ராஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், கே எஸ் பரத், தேவ்தத் படிக்கல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் , முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.
Be the first to comment on "இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது."