நியூ டெல்லி: இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக பேட்டிங் செய்யும் யுக்தியை கடைபிடித்து எதிரணிகளை அடித்து நொறுக்கி வரும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது.
இருப்பினும் கடந்த 12 வருடங்களாக டெஸ்ட் தொடரில் எந்தவொரு அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியதில்லை என்ற கௌரவத்தை பெற்று வரும் இந்திய அணி இம்முறை இங்கிலாந்தையும் தோற்கடித்து அந்த கௌரவத்தை தக்க வைக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஏனெனில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் இங்கிலாந்து பேட்டர்களை தெறிக்க விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதேசமயம் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் இந்திய பேட்டர்கள் திணறுவதற்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஸபார்டர் – கவாஸ்கர் கோப்பையில் இந்தூரில் நடைபெற்ற போட்டியில் இந்திய பேட்டர்கள் ஆஸ்திரேலிய வீரர்களின் சுழலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தோல்வியைத் தழுவினர்.
எனவே இம்முறை சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் நீங்கள் தான் ஆரம்பத்திலே அதிரடியாக விளையாடி மிடில் ஆர்டர்களின் அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்று கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆலோசனை வழங்கியுள்ளார். குறிப்பாக 2021 டெஸ்ட் தொடரில் இதே இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை போன்ற சவாலான பிட்ச்சில் அதிரடியான சதமடித்து இந்தியாவை வெற்றிபெற வைத்தது போல் இம்முறையும் நீங்கள் செயல்பட வேண்டும் என்று ரோஹித் ஷர்மாவை சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், “2021ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா களமிறங்கி சதமடித்த விதம் நன்றாக இருந்தது. குறிப்பாக அப்போட்டியில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் அவர் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை அனைவருக்கும் காண்பித்தார். ஒருவேளை அவர் இந்த தொடரிலும் அதே வழியை பயன்படுத்தி தொடர்ந்து பேட்டிங் செய்தால் கண்டிப்பாக இந்தியாவுக்கு சிறந்த தொடக்கம் கிடைக்கும். அதுமட்டுமின்றி 3, 4வது இடத்தில் விளையாடும் பேட்டர்களின் வேலையை இது எளிதாக்கும்
இம்முறை முதல் போட்டி நடைபெறும் ஹைதராபாத் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்குமா என்பதை ஒரு கேப்டனாக அவர் பார்க்க வேண்டும். ஒருவேளை அப்போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து உணவு இடைவெளிவரை விக்கெட் எடுக்காமல் போனால் ரோஹித் சர்மா தம்முடைய பந்துவீச்சாளர்களை களமிறக்கி எதிரணியை எப்படி மாற்றி மாற்றி அட்டாக் செய்கிறார் என்பதை ஆவலாக இருக்கும். அந்த வகையில் நாம் இத்தொடரில் அவரின் கேப்டன்ஷிப்பை பார்த்து மதிப்பிடலாம்” இவ்வாறு சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டனுக்கு சுனில் கவாஸ்கர் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளார்."