செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடந்துமுடிந்த டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நேற்று செஞ்சூரியனிலுள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெறத் தொடங்கியது. மழை காரணமாக சற்று தாமதமாக தொடங்கப்பட்ட இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி தனது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா -யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடியில் கேப்டன் ரோஹித் சர்மா 5(14) ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் காகிசோ ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17(37) ரன்களிலும், ஷுப்மன் கில் 2(12) ரன்னிலும் என அறிமுக வீரர் நந்த்ரே பர்கர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி -ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இருப்பினும் இருவரும் அடுத்தடுத்து கொடுத்த கேட்ச் வாய்ப்பை மார்கோ ஜான்சென் மற்றும் டோனி டி ஸோர்ஸி ஆகியோர் தவறவிட தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் வாய்ப்பும் கைநழுவியது.
அதேசமயம் சிறப்பாக விளையாடிய இருவரும் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போது ஸ்ரேயாஸ் ஐயர் 31(50) ரன்களிலும், விராட் கோலி 38(64) ரன்களிலும் என காகிசோ ரபாடா பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
ஆனால் இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய கே.எல்.ராகுல் ஒருபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 8(11) ,ஷர்தூல் தாக்கூர் 24(33) ஆகியோர் காகிசோ ரபாடா பந்துவீச்சிலும், ஜஸ்ப்ரீத் பும்ரா 1(19) ரன்னுடன் மார்கோ ஜான்சன் பந்துவீச்சிலும் விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ராகுல் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் இந்திய அணி 59 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டதால் முதல்நாள் ஆட்டம் நிறைவுபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணி தரப்பில் ராகுல் 70(105) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Be the first to comment on "கே.எல்.ராகுலின் நிதானமான ஆட்டத்தால் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 208/8 என்ற நிலையில் உள்ளது."