ஆலூர்: இந்தியாவில் வருகின்ற அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரையிலான தேதிகளில் ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை தொடர் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் ஐசிசி உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் அனைவரும் இந்திய அணியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, உற்சாகமளிக்கும் புதிய சவாலை உலகக் கோப்பை தொடர் கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது மிக முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உங்களுக்கு முன்னர் ஏதேனும் ஒரு சவால் இருந்தால், நீங்கள் அதை எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். உங்களுக்கு முன் ஒரு கடினமான சூழல் வந்தால் நீங்கள் உற்சாகமடைவீர்கள். நீங்கள் அதிலிருந்து விலகி செல்ல மாட்டீர்கள்.
15 ஆண்டுகளைக் கடந்தும் சர்வதேச கிரிக்கெட்டில் நான் பல சவால்களை எதிர்கொண்டுதான் இருக்கிறேன். அந்த சவால்களில் வரவிருக்கும் உலகக் கோப்பை தொடரும் ஒன்று. இந்த சவால் எனக்கு மிகவும் உற்சாகமளிக்கிறது. நான் என்னை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல இதுபோன்ற புதிய சவால்கள் தேவைப்படுகின்றன. அழுத்தம் என்பது எப்போதும் இருக்கும். நாங்கள் உலகக் கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்றுதான் ரசிகர்கள் எப்போதும் ஆசைப்படுவார்கள். அவர்களை விட உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு அதிகமாக உள்ளது. ஆகையால், நான் சரியான இடத்தில் இருக்கிறேன். நேர்மையாக கூற வேண்டுமென்றால் எங்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இதில் மக்களின் உணர்வுகளும் அடங்கியுள்ளது.
இருப்பினும், இந்திய வீரர்களை காட்டிலும் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என நினைப்பவர்கள் யார் இருக்கப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும்போது நான் அணியில் இருந்தேன். அப்போது எனக்கு 23 வயதுதான். எனவே, உலகக் கோப்பையின் உணர்வுகள் அந்த அளவுக்கு என்னை பாதிக்கவில்லை. ஆனால், அதன்பின், பல உலகக் கோப்பையில் விளையாடியும், எங்களால் கோப்பையை வெல்ல முடியவில்லை. என்னால் இப்போது மூத்த வீரர்களின் வலியை உணர முடிகிறது.
ஏனெனில் எப்போதும் அழுத்தத்தில் இருந்த மூத்த வீரர்கள் அதை அழகாக கையாண்டது, புத்திசாலித்தனமாக இருந்தது. உலகக்கோப்பை வென்ற அன்றைய இரவு ஏதோ மாயாஜாலமாக இருந்தது. நாங்கள் பயணம் செய்யும் போது அனைத்து வீரர்களின் மீதும் இருந்த அழுத்தம் எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, அப்போது சமூக ஊடகங்கள் எதுவும் இல்லை. உண்மையைச் சொன்னால், அது ஒரு கனவு போல இருந்தது. ஆனால் விமானத்தில் பயணம் செய்யும்போதும் எங்கள் மனதில் இருந்தது எப்போதும் ஒன்றுதான். நாம் கோப்பையை வெல்ல வேண்டும்” இவ்வாறு விராட் கோலி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "உலகக்கோப்பை தொடர் ஒரு புதிய சவ்லை கொடுக்கிறது என்று விராட் கோலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்."