ஷஃபாலி வர்மா மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோரின் அபார பந்துவீச்சால் வங்கதேசத்தை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா.

www.indcricketnews.com-indian-cricket-news-10034406

டாக்கா: இந்தியா- வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்று வரும் நிலையில், நேற்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. டாக்காவிலுள்ள மிர்பூர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா -ஷஃபாலி வர்மா ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 13(13) ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஷஃபாலி வர்மாவும் 19(14) ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இருப்பினும் அதன்பின்னர் தான் இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் நட்சத்திர வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8(21), கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 0(1), விக்கெட் கீப்பர் யஸ்திகா பாட்டியா 11(13), ஹர்லீன் தியோல் 6(21), தீப்தி ஷர்மா 10(14), அமன்ஜோத் கவுர் 14(17) ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் பூஜா வஸ்திரேகர் 7(4) மற்றும் மின்னு மணி 5(3) ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர். வங்கதேச அணி தரப்பில் சுல்தானா காதுன் 3 விக்கெட்டுகளையும், ஃபஹிமா காதுன் 2 விக்கெட்டுகளையும்,  நஹிதா அக்தர், மரூவா அக்தர் மற்றும் ரபியா காதுன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திக் கொண்டு களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீராங்கனைகளான ஷமிமா சுல்தானா, ஷதி ராணி ஆகியோர் தலா 5 ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேற, தொடர்ந்து வந்த முர்ஷிதா காதும் 4(15) ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஆனால் அதன்பின் களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய வீராங்கனைகள் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.

அதேசமயம் தனி ஆளாக நின்று இந்திய விராங்கனைகளுக்கு பதிலடி கொடுத்த நிகர் சுல்தானா 38(55) ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச மகளிர் அணி 87 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா, ஷஃபாலி வர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மின்னு மணி 2 விக்கெட்டுகளையும், அனுஷா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் இந்திய மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தியதுடன், டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

Be the first to comment on "ஷஃபாலி வர்மா மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோரின் அபார பந்துவீச்சால் வங்கதேசத்தை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா."

Leave a comment

Your email address will not be published.


*