டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்திய சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலின் முதல் நான்கு இடத்தில் தனக்கான இடத்தை வலுப்படுத்தியது.

www.indcricketnews.com-indian-cricket-news-10034541
Rilee Rossouw of Delhi Capitals reacts after dismissal during match 55 of the Tata Indian Premier League between the Chennai Super Kings and the Delhi Capitals held at the MA Chidambaram Stadium, Chennai on the 10th May 2023 Photo by: Deepak Malik / SPORTZPICS for IPL

சென்னை: 16ஆவது ஐபிஎல் தொடரின் 55ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.

அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களான டெவான் கான்வே -ருதுராஜ் கெய்க்வாட் ஜோடியில் கான்வே 10(13) ரன்களுடன் அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் 24(18) ரன்கள் எடுத்திருந்த ருதுராஜும் அக்ஸரிடம் விக்கெட்டை இழந்தார். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி 7(12) ரன்களுக்கு குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுபுறும் அதிரடியாக விளையாட முற்பட்ட அஜிங்கியா ரஹானே 21(20) ரன்கள் எடுத்திருந்த நிலையில் லலித் யாதவ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினார். 

ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷிவம் தூபே- அம்பத்தி ராயுடு ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இருப்பினும் தூபே தனது பங்கிற்கு 3 சிக்சர்களை பறக்கவிட்டு 25(12) ரன்களுடன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ராயூடுவும் 23(17) ரன்களில் கலீல் அகமத் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இறுதியில் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் எம்.எஸ்.தோனி- ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் ஜடேஜா 1 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 21(16) ரன்களில் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அதே ஓவரில்  அடுத்தடுத்து 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசிய தோனி 20(9) ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே அணி 167 ரன்களை சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் -பிலிப் சால்ட் ஜோடியில் வார்னர் ரன்கள் ஏதுமின்றி தீபக் சஹார் வீசிய முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக்கி வெளியேறினார்.

அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சால்ட் 17(11) ரன்களுடன் தீபக் சஹாரிடம் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த மிட்செல் மார்ஷ் 5(4) ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இவர்களைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த ரைலீ ரூஸோவ்- மனீஷ் பாண்டே ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த நிலையில், பாண்டே 29(27) ரன்களில் மதீஷா பதிரான பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து அரைசதம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்த ரூஸோவ் 35(37) ரன்களில் ஜடேஜாவிடம் ஆட்டமிழக்க, அடுத்துவந்த அதிரடி காட்டிய அக்ஸர் படேலும் 21(12) ரன்களை சேர்த்து மதீஷா பதிரானவிடம் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினர். அதன்பின் இறுதியில் களமிறங்கிய ரிப்பல் படேல் 10(16) ரன்களில் ரன் அவுட்டாகி ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த லலித் யாதவ் 12(5) ரன்களுடன் மதீஷா பதிரானா பந்துவீச்சில் வெளியேறினார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 140 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சிஎஸ்கே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

Be the first to comment on "டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்திய சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலின் முதல் நான்கு இடத்தில் தனக்கான இடத்தை வலுப்படுத்தியது."

Leave a comment

Your email address will not be published.


*