இந்தியா த்ரில் வெற்றி: 32 வருட சாதனை முறியடிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது (கடைசி) டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 336 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆன நிலையில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை 294 ரன்களுக்கு முடித்துக்கொண்டு, இந்திய அணிக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடைசி நாள் கடைசி செஷன் வரை போராடி இந்திய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று, 2-1 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

ஐந்தாவது நாள் ஆட்டத்தின் இரண்டாவது செஷன் நிறைவடைந்தபோது புஜாரா 43 (160), ரிஷப் பந்த் 2 (6) களத்தில் இருந்தனர். இருவரும் கடைசி செஷினிலும் நிலைத்து நின்று விளையாடினார்கள். புஜாரா சிறப்பாக விளையாடி 196 பந்துகளில் அரை சதம் கடந்தார். முதல் இன்னிங்ஸில் 174 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இருவரையும் வீழ்த்த ஆஸ்திரேலிய அணி கடுமையாகப் போராடியது. புஜாரா தொடர்ந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். மறுமுனையில் ரிஷப் பந்த் ஸ்ட்ரைக் ரேட்டை 40க்கும் குறையாமல் பார்த்துக்கொண்டார். இதனால் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது.

80 ஓவர்கள் முடிந்ததும் புது பந்தைக் கையில் எடுத்த பேட் கம்மின்ஸ், இரண்டாவது பந்தில் புஜாராவை 56 (211) வீழ்த்தினார். சில நிமிடங்களில் மயங்க் அகர்வாலும் 9 (15) அவுட் ஆனார். இதனால் இந்திய அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், இதை எதையும் கண்டுகொள்ளாமல் ரிஷப் பந்த் மறுபுறம் நிலைத்து நின்று தேவையான நேரத்தில் ஷாட் அடித்து விளையாடினார். வாஷிங்டன் சுந்தர் அவருக்குப் பக்கபலமாக இருந்தார். கடைசி 8 ஓவர்களுக்கு 50 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அடுத்தடுத்த ஓவர்களில் 11, 15, 9 என ரன்கள் பறந்தது.

கடைசி 4 ஓவர்களுக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் நாதன் லைன் வீசிய பந்தில் சுந்தர் 22 (29) ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தார். போட்டி மீண்டும் பரபரப்பான கட்டத்தை எட்டியது. ஷர்துல் தாகூரும் 2 (3) விரைவில் பெவிலியன் திரும்பி ரசிகர்களின் ரத்தக் கொதிப்பை அதிகப்படுத்தினார். இருப்பினும் ரிஷப் பந்த் 89* (138) சிறப்பாகச் செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

இதனால் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. பிரிஸ்பேனில் 1988ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி தோல்வியைத் தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "இந்தியா த்ரில் வெற்றி: 32 வருட சாதனை முறியடிப்பு!"

Leave a comment

Your email address will not be published.


*