கிரிக்கெட் வீரர்கள் குற்றத்தை தானாக முன்வந்து ஒப்புக்கொண்டால் பொது மன்னிப்பு: பிசிசிஐ

வயது குறித்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் தானாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டால் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் மீது ஆர்வம் உள்ள இளைஞர்கள் எப்படியாவது இந்திய அணியில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

இந்தியாவில் 18 வயதிற்கு உட்பட்டோர், 23 வயதிற்கு உட்பட்டோர், சீனியர் அணி என பல பிரிவுகளில் தேசிய அளவிலான கிரிக்கெட் அணி உள்ளது. அதேபோல் மாநில அளவிலும் அணிகள் உள்ளன. இதில் சில வீரர்கள் வயதை குறைத்துக் காட்டி அணியில் முறைகேடாக இடம் பிடித்து விளையாடுகிறார்கள்.

பின்னர் அவர்களின் முறைகேடு கண்டுபிடிக்கும்போது அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையும், அவருக்குப் பதிலாக இடம்பிடிக்க வேண்டிய மற்ற வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையும் வீணாகிவிடுகிறது.

இளையோர் அணி பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், வயது முறைகேட்டில் ஈடுபடும் வீரர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இது குறித்து பேசிய அவர் வயது மோசடி ஒரு தீவிரமான பிரச்சினை என்றும் விளையாட்டின் வளர்ச்சிக்கு சாதகமற்றது என்றும் கூறினார். இந்த நடைமுறையின் காரணமாக ஒரு குறிப்பிட்ட வயதிற்குள் விளையாட வேண்டிய பல திறமையான இளைஞர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: எல்லா வயது பிரிவிலும் அதற்குரிய சமமான போட்டி களத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். வயது மோசடியை சமாளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வயது மோசடியை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கையை இந்த சீசனில் இருந்து கடுமையாக்க முடிவு செய்து இருக்கிறோம். உச்சநீதிமன்றமும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வயது முறைகேட்டில் ஈடுபட்ட வீரர்கள் தானாக முன்வந்து செப்டம்பர் 15-ந்தேதிக்குள் இந்திய கிரிக்கெட் வாரிய வயது சரிபார்த்தல் பிரிவுக்கு கையெழுத்திட்ட கடிதத்துடன் இ-மெயில் செய்ய வேண்டும். குற்றத்தை ஒப்புக்கொண்டு சான்றிதழ்களை திருத்தம் செய்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். இல்லையெனில் இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்படும். அதன்பின் மாநில மற்றும் தேசிய அணிக்கும் இடம் பெற முடியாது என்று தெரிவித்துள்ளது. ஆனால் குடியேற்றம் குறித்த முறைகேட்டில் பொது மன்னிப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளது. தவறான குடியேற்ற சான்றிதழ் அளிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கும் 2 கால ஆண்டு தடை விதிக்கப்படும்.

Be the first to comment on "கிரிக்கெட் வீரர்கள் குற்றத்தை தானாக முன்வந்து ஒப்புக்கொண்டால் பொது மன்னிப்பு: பிசிசிஐ"

Leave a comment

Your email address will not be published.


*