மும்பை: ஐசிசி 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா,”1983ஆம் ஆண்டு முதன்முறையாக உலகக்கோப்பையை வென்றபோது எங்கள் அணியில் பலர் பிறக்கவே இல்லை. அதேபோல 2011ஆம் ஆண்டு கோப்பையை வென்றபோது இப்போதைய வீரர்களில் பலர் கிரிக்கெட் விளையாடவே தொடங்கியிருக்கவில்லை.
இதற்குமுன் என்ன நடந்தது, கடந்த உலகக்கோப்பையில் என்ன நடந்தது என்பது குறித்து அணி வீரர்கள் பேசி நான் பார்த்ததுமில்லை. இந்தத் தருணத்தில் இந்தப்போட்டியை எப்படி அணுகுவது என்பதில்தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். நியூசிலாந்து அணியினர் கிரிக்கெட் ஆடும் விதத்திலும் ஆட்டத்தை அணுகும் முறையிலும் ரொம்பவே ஒழுக்கமானவர்கள்.
ஆட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்கின்ற திட்டமிடல் அவர்களிடம் தெளிவாக இருக்கும். பல ஐசிசி தொடர்களில் சீராக அரையிறுதி வரைக்கும் முன்னேறியிருக்கிறார்கள். இந்தச் சீரான தன்மையில்தான் அவர்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு அணியின் பலம், பலவீனம் என்னவென்று நாங்கள் அரிந்து வைத்திருக்கிறோம். அதன்படி, திட்டங்களைத் தீட்டி களத்தில் செயல்படுவோம்.
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகினார். அவர் விலகியதால் முக்கியமான போட்டிகளில் இந்திய அணியின் ஆடும் லெவனையே மாற்றியமைக்க வேண்டியிருந்தது. குறிப்பாக நெதர்லாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் பந்துவீச்சாளர்களைத் தவிர மற்ற அனைத்து வீரர்களையும் பந்துவீச்சில் பயன்படுத்திக் கொண்டோம். பந்துவீச்சாளர்கள் கூடுதலாக இருப்பது நல்லதுதான். இருப்பினும், அவர்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காயம் காரணமாக நீண்டநாள் இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர்களுக்கு ஆதரவளித்த தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு நன்றி தெரிவித்துள்ள ரோஹித் ஷர்மா இதுகுறித்து பேசுகையில், “உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முதுகெலும்பாக மிடில் ஆர்டர் மாறுவதற்கு முன்பு, நட்சத்திர பேட்டர்களான கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சர்வதேச ஒருநாள் உலகக்கோப்பையில் மறுபிரவேசம் செய்தனர். இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயரை மிடில் ஆர்டரில் முன்னிலைப்படுத்தியபோது, ஆல்ரவுண்டர் ராகுலை உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர்-பேட்டராக டிராவிட் மாற்றினார். இதன்காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்துமுடிந்த நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பையின் கடைசி லீக் ஆட்டத்தில் இவர்கள் இருவரும் 208 ரன்கள் குவித்து சாதனை படைத்தனர்.
என்னிடம் மந்திரம் இல்லை. ஒரு கேப்டனாக, நீங்கள் எப்படி விளையாட வேண்டும் என்று முடிவு செய்திருந்தாலும், உங்களுக்கு தெளிவு இருக்க வேண்டும். அதேசமயம் வீரர்களுக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டும். இந்த உலகக்கோப்பையில் ஒவ்வொரு ரோலுக்கும் சில வீரர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் வீரர்களை ஆதரிப்பது மட்டுமின்றி, கடைசி வரை அவர்களுடன் நிற்போம். இதற்காக நாம் ராகுல் டிராவிட்டிற்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும். எதிர்காலத்திலும் இதனை தொடர்ந்து செய்வோம்” இவ்வாறு ரோஹித் ஷர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Leave a comment