நியூ டெல்லி: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா அணி தன்னுடைய சொந்த மண்ணில் இதுவரை களமிறங்கிய 5 போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தி வருகிறது.
குறிப்பாக ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை தோற்கடித்த இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து 8வது முறையாக தனது பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி தங்களுடைய வெற்றி சரித்திரத்தை தக்க வைத்துக்கொண்டது. அதே புத்துணர்ச்சியுடன் 4வது போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, தொடர்ந்து 5வது போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் 20 வருடங்கள் கழித்து முதன்முறையாக ஐசிசி தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிநடை போட்டுவருகிறது.
மேலும் அப்போட்டியில் ஆடும் லெவனில் இடம்பெற்ற முகமது ஷமி ஆட்டநாயகன் விருது வெல்லும் அளவுக்கு அனைத்து வீரர்களும் சிறப்பான ஃபார்மில் இருப்பதால் 2011ஆம் ஆண்டு போல இந்தியா இம்முறை தனது சொந்த மண்ணில் கோப்பையை முத்தமிடும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
இதனைத்தொடர்ந்து இந்த வெற்றிப்பயணத்தில் இந்திய அணி தன்னுடைய 6வது போட்டியில் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வரும் அக்டோபர் 29ஆம் தேதியன்று லக்னோ நகரில் எதிர்கொள்ள இருக்கிறது. 2019 உலகக்கோப்பையை வென்று சமீப காலங்களாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் எதிரணிகளை வீழ்த்தி சிறப்பாக செயல்படக்கூடிய இங்கிலாந்து அணி நடப்பு தொடரில் ஆரம்பம் முதலே தடுமாறி வருகிறது.
குறிப்பாக அரையிறுதிச் சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி இதுவரை பங்கேற்று விளையாடிய 4 போட்டிகளில் 1 வெற்றியை மட்டுமே பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தடுமாறி வருவது அனைவருக்கும் ஆச்சரியமாகவே உள்ளது.
இந்நிலையில் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்று கோப்பையை தக்கவைக்க மீதமுள்ள போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி காயம்பட்ட சிங்கத்தை போல இந்தியாவுக்கு எதிராக செயல்படலாம் என்று வாசிம் அக்ரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், “சிறந்த ஃபார்மில் இருக்கும் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெறக்கூடிய அணியாக இருக்கிறது. ஆனால் இங்கிலாந்து அணி தற்போது காயம்பட்ட சிங்கமாக இருக்கிறது. குறிப்பாக வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற காரணத்தால் இங்கிலாந்து அணி இப்போட்டியை வித்தியாசமான அணுகுமுறையுடன் அணுகுவதை காணலாம். இருப்பினும் இந்தியா கட்டுப்பாட்டுடன் கூடிய ஆக்ரோஷத்துடன் விளையாடுகிறது” என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
அதே நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீசாந்த் இதுகுறித்து கூறுகையில்“2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி வெளிப்படுத்திய செயல்பாடுகளை நடப்பு உலகக்கோப்பையில் இந்தியா வெளிப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். ஒரு முன்னாள் வீரராகவும், இந்தியனாகவும் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தியா தொடர்ந்து வெற்றிபெற வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்” இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.
Be the first to comment on "இந்தியா வெற விரும்புகிறது. ஆனால் காயம்பட்ட சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கு என்று வாசிம் அக்ரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்."